நடப்போம்! நலம் பெறுவோம்! திட்டத்தின் கீழ் கோவை பந்தைய சாலையில் நடைபயிற்சியை தமிழக வீட்டு வசதி வாரியம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நடப்போம் ! நடைபெறுவோம் ! திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 8 கிலோ மீட்டர் நடைபயற்சி மேற்கொண்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காணொலி மூலம் துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி கொடியசைத்து நடைபயிற்சியை துவக்கி வைத்தார். இந்த நடைபயிற்சி ரேஸ்கோர்ஸ், திருச்சி சாலை, வாலாங்குளம் வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் ரேஸ்கோர்ஸ் பகுதியை வந்தடைந்தது.
இந்த நடைபயிற்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், துணை மேயர் வெற்றிசெல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நடைப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, இது ஏதோ ஒரு திட்டம் அல்ல எனவும் நடக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களை ஊக்குவிக்கவே இந்த திட்டம் என்றும் குறிப்பிட்டார்.
கோவை ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர்கள் பெரிய எண்ணிக்கையில் இருந்தாலும் சாதாரண மக்களும் அதில் பங்கேற்று நடப்பதற்கு தான் இந்த திட்டம் துவக்கி இருக்கிறார்கள் என்றும் கூறினார். அரசு பல்வேறு திட்டங்களை செய்திருக்கும் சூழலில் இவை அனைத்துமே மக்கள் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கும் சில பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறியதுடன் நடப்போம் நலம் பெறுவோம் என்ற இந்த திட்டத்தை முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் 500 பேர் இதனைப் பயன்படுத்தினால் நிச்சயமாக ஆயிரம் பேர் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமையும் இதற்கான ஏற்பாடுகள் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருப்பதாகவும் மற்ற நாட்களிலும் இதனைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்த தவறும் கிடையாது எனவும் கூறிய அமைச்சர் முத்துசாமி, இந்த நடைபயிற்சிக்கு அரசு சார்பாகவும் காவல்துறை சார்பாகவும் என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்வார்கள் என்றும் மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.