• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மல்லி கிராமத்தில் ஐயப்பன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமத்தில் ஐயப்பன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி கிராமத்தில் புதிதாக ஐயப்பன் கோயில் கட்டப்பட்டு அங்கு மூலவராக பஞ்சலோக ஐயப்பன் மற்றும் விநாயகர், நாகர், மஞ்சள் மாதா, பாலமுருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், கருப்பசாமி, கடுத்தசாமி ஆகிய தெய்வங்கள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இரண்டு நாட்கள் யாகசாலைகள் அமைக்கப்பட்டு, அதில் சிவ ஆகம முதல் முறைப்படி சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை ஐயப்பன் மற்றும் பரிவாரவாக தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. வைத்தியநாத சுவாமி திருக்கோயில் தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ ரகு என்ற கைலாச பட்டர், சிவ ஸ்ரீ ஆனந்த் விஜய் பட்டர்,வருனேஷ் பட்டர் மற்றும் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர். பஞ்சலோகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐயப்ப சுவாமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கௌரவ தலைவருமான எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், தலைவர் எஸ் பால்பாண்டி, செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, பொருளாளர் எஸ்.சண்முகவேல் பாண்டியன், துணை தலைவர் சி பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர் ஆர் முருகன், ஆலோசகர் சிற்பி சீனிவாசன், அவைத்தலைவர் செல்வகுமார் மற்றும் மல்லி ஐயப்பன் கோயில் விழா கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கிராம பொதுமக்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.