பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று கூறினாலே அது பாலிவுட் படங்கள்தான் என்ற நிலையை தென்னிந்திய படங்கள்தான் என்ற நிலையை, கோலிவுட் திரைப்படங்கள் மாற்றிவிட்டன. அதன்படி வசூல் சாதனை பட்டியலில் பாகுபலி 2, புஷ்பா, கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து நடிகர் கமலின் விக்ரம் படமும் இணைந்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில ஆக்ஷன் த்ரில்லர் படமாக் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா என உச்ச நட்சத்திரங்கள் தொடங்கி, சந்தான பாரதி, காளிதாஸ் ஜெயராம், காயத்ரி என பல நட்சத்திரங்கள் நடிப்பில் ஜூன் 3ல் வெளியாகி வெற்றிகரமாக 25 நாளை எட்டியிருக்கிறது விக்ரம். இத்திரைப்படம் வெளியான நாள் முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் விக்ரம் படத்துக்கு ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இது 25வது நாளாகவும் தொடர்ந்து வருவது சினிமா வட்டாரங்களை மட்டட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த நிலையில், கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பிலான விக்ரம் படம் தமிழ்நாட்டில் ஆல் டைம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்ற சாதனையை படைத்திருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 172 கோடி வசூலித்துள்ளது. அதேபோல, கேரளாவில் 38.75 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் 36 கோடி, கர்நாடகாவில் 24.2 கோடி, மற்ற மாநிலங்களில் 16.25 கோடி என இந்தியாவில் மட்டும் 287.2 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்திருக்கிறது விக்ரம் படம். இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் 15.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.121 கோடி) வசூலித்து உலக அளவில் 408.2 கோடி ரூபாய் வசூல் செய்து தமிழ் படம் ஒன்று இமாலய சாதனை படைத்திருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான விக்ரம் படத்துக்கு 25வது நாளை எட்டினாலும் திரையரங்குகளில் கூட்டம் குறைந்த பாடில்லை என்றும், இன்னும் இரண்டு வாரங்களுக்கு விக்ரம் படத்தை பார்க்க மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.