உசிலம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைக்கப்படவுள்ள இடத்தை உசிலம்பட்டி நீதிமன்றங்களின் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சார்பு நீதிமன்றம், உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற கட்டிடங்களை இடமாற்றம் செய்வது ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க தொடர் கோரிக்கைகள் எழுந்தது.

இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைக்க உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியில் அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு, இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன.
இதனையடுத்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமையவுள்ள இடத்தை இன்று உசிலம்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி ஜஸ்டின் ராஜ், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 நீதிபதி சத்திய நாராயணன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க தேவையான இடத்தை வருவாய்த்துறை சார்பில் ஒதுக்கி கொடுக்கப்படவுள்ளது குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.
இந்நிகழ்வில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். விரைவில் உசிலம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைக்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.