கோவை மாவட்ட பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக அனைத்து சமய தலைவர்கள் கலந்து கொண்ட ஈத் மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக மத நல்லிணக்க புனித ரமலான் ஈத் மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி போத்தனூர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் டிஸ்கோ காஜா தலைமையில் நடைபெற்ற இதில்,மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அபுதாகீர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இஸ்மாயில்,தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் அபுதாகீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் எஸ்.ஏ.பஷீர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர், தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கு.இராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

விழாவில் கவுரவ அழைப்பாளர்களாக அனைத்து சமய தலைவர்கள் அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத், பேரூர் மடம் உமாபதி தம்புரான், அருட்தந்தை ராஜசேகர் மற்றும் டோனி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில்,சமயங்கள் கூறும் கொள்கைகளை மனிதர்கள் கடை பிடித்தாலே அனைவரும் மத்தியிலும் ஒற்றுமை ஏற்படும் என கூறினர். மதங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி பெறும் என தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் பல்சமய நல்லுறவு இயக்கத்தில் புதிய இளைஞர்கள் இணைந்தனர். விழாவில் கோட்டை செல்லப்பா,கோவை தல்ஹா,முகமது அலி,டயானா ஸ்டுடியோ சந்திரசேகர், சீனிவாசன்,ராதாகிருஷ்ணன், கோவை லெனின், காமராஜ், வெள்ளலூர் சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.