• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை வாடிப்பட்டியில், எடப்பாடிக்கு பாதுகாப்பு குறைபாடு காரணம் என கட்சியினர் புகார்…

ByKalamegam Viswanathan

Jan 7, 2024

மதுரையில் நடைபெற்ற எஸ். டி. பி ஐ கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வரவேற்பதற்காக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டி அருகே தனுச்சியம் பிரிவில் சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த நிலையில் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசாரை போதிய அளவில் நிறுத்தாததால் வாடிப்பட்டி முதல் தனிச்சியம் பிரிவு வரை வாகனங்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது. மதியம் 2 மணி முதல் நான்கு மணி வரை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய அளவு போலீசார் இல்லாததால் இரண்டு கிலோமீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் சாலையில் ஊர்ந்து சென்ற வண்ணம் இருந்தது. இந்த நிலையில் சுமார் 4:30 மணி அளவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி வாடிப்பட்டி வந்த நிலையில், அவரது கார் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் சிறிது நேரம் கட்சியினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் வாகனத்திற்கு முன் வந்த போலீசார் வாகனம் அருகே திடீரென சர்வீஸ் சாலையில் புகுந்து போக்குவரத்து நெருக்கடியில் இருந்து வெளியேறி சென்றது. பின்னர் கட்சியினர் வரவேற்பு கொடுத்த பின்பு மதுரை புறப்பட்டு சென்றது. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் வருகை தரும் நிலையில் போதிய அளவில் போலீசார் நிறுத்தாததால் எடப்பாடி பழனிச்சாமி வந்த வாகனம் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டது. கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில், ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே போக்குவரத்தை சரி செய்ய, போதிய அளவில் போலீசாரை நிறுத்தாததால் இந்த நிலைமை ஏற்பட்டது. இனிவரும் காலங்களிலாவது முக்கிய தலைவர்கள் வரும்போது போதிய அளவில் போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.