நற்றிணைப் பாடல் 282:
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் கிளவியின் தணியின், நன்றுமன் – சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
ஆடு மழை மங்குலின், மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே?
பாடியவர் : நல்லூர்ச் சிறு மேதாவியார்
திணை : குறிஞ்சி
பொருள் :
தொகுதியாக அமைத்துச் செறித்தலையுடைய இலங்குகின்ற வளைகள் நெகிழ்ச்சியுறப் பக்கம் உயர்ந்த அல்குலினுடைய அழகிய வரிகள் வாட்டமடைய நல்ல நுதலின்கண்ணே பசலைபாயக் கவலைமிக்க நீங்குதல் அரிய நோயானது; நங் காதலனாலே தரப்பட்டதென்பதை அறியாது நம் அன்னை படிமத்தானுக்கு இவள் படும் நோயின் காரணம் தெரியவேண்டும் என்றறிவிப்ப; அந்த அறிவு வாய்ந்த வேலன் வெறிக்களத்து முருகவேளின் முன்பு இடப்பட்ட சுழற்சிக் கொட்டையைக் கொண்டு ஆராய்ந்து; முருகணங்கென்று அம் முருகவேளைத் துதித்தலாலே தணியப்படுமாயின் அது மிக நல்லதேயாம்; அங்ஙனம் வெறியுமெடுக்காது இல்வயிற் செறிக்கப்பட்டமையால்; இனிச் சாரலின்கண்ணே அகிலைத் தீயிட்டுக் கொளுத்துங் கானவன் ஆங்குள்ள சருகில் முதலிலே தீயிடுதலானே நறுமணம் வீசுகின்ற புகையானது இயங்குகின்ற மழைமேகம்போல் மறைக்கப்பட்ட நாடுவிளங்கிய சிலம்பனுடன்; விரும்பிப் பொருந்திய நமது தொடர்ச்சி கழிந்துவிட்டதுபோலும்.