வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்பநம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.
பாடியவர்: ஒளவையார்.
பாடலின் பின்னணி:
தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, “ நீ பிரிவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; வருந்தாதே!” என்று ஆறுதல் கூறுகிறாள். அதற்குத் தலைவி, “அவர் சென்ற வழி மிகவும் வெம்மையான காற்று வீசும் பாலைநிலம் என்று கூறுகிறார்களே! அதைக் கேட்ட பிறகும் நான் எப்படி வருந்தாமல் இருக்க முடியும்?” என்று கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
தோழி, என்னுடைய மார்பைத்தழுவி உறங்குவதை வெறுத்த என் தலைவர், என்னைவிட்டுப் பிரிந்து சென்றார். அவர் சென்ற வழியானது, வெம்மையான, வலிமையுடைய, விரைவான காற்று வீசுவதால், வாகை மரத்தின் மரக்கிளைகளில் உள்ள முற்றிய வற்றல் ஒலிக்கும் மலைகளையுடைய, கடத்தற்கரிய பாலைநிலம் என்று கூறுவர்.