ஆதி பராசக்தியின் அவதாரம் என்று தன்னை அழைத்துக் கொண்டிருக்கும் அருள்வாக்கு அன்னபூரணி குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் விறுவிறுப்பாக பரவி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அவருடைய நிகழ்ச்சி காவல்துறை அனுமதி இல்லாமல் நடைபெற இருந்ததை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்; “செங்கல்பட்டு மாவட்டத்தில் அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டேன். அதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையிடம் விளக்கம் அளித்து விட்டேன்.
எனவே, என்னைப் பற்றிய தேவையில்லாத வதந்திகளை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்ப வேண்டாம். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. இங்கு ஆன்மீகம் என்பதே தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. அதை சரியான பாதைக்கு கொண்டு செல்லவே நான் வந்துள்ளேன்.என்னை ஆதிபராசக்தி என்று கூப்பிட நான் நிர்ப்பந்தம் செய்யவில்லை. அம்மா என்று கூப்பிட்டால் போதும் என்றுதான் கூறி உள்ளேன். தாயாக என்னை தேடி வருபவர்களை வரவேற்க தயாராக இருப்பேன். தவறான கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடப்பதை போன்று என்னையும் நினைக்க வேண்டாம்.
மேலும், பிற ஆண்களுடன் என்னை தொடர்பு படுத்திப் பேச வேண்டாம். எனக்கு மூன்றாவது கணவர், நான்காவது கணவர் இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் தவறானது. இதுபோன்ற செய்திகளை பரப்புவதை நிறுத்தி விடுங்கள்.இனிமேல், நிகழ்ச்சி நடத்தும்போது முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற்று நடத்துவேன்.நான் தலைமறைவாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பொய்யானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அருள்வாக்கு அன்னபூரணியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.