யாழ் குணசேகரன் இயக்கத்தில் கதிரேச குமார் தயாரித்து அவரே நடித்து வெளி வர இருக்கும் திரைப்படம் தான் “கெழப்பய”
70வயதான கதிரேச குமார் தான் இப் படத்தின் கதா நாயகன் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் இவர் பணிமுடிந்து தனது இரு சக்கர மிதி வண்டியில் வீடு திரும்பும் போது, அவ்வழியாக ஒரு கார் ஒன்று வருகிறது.
அது கிராமபுற ரோடு என்பதால் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். அந்த காரில் கர்ப்பிணி பெண் ஒருவரோடு சேர்த்து 5 பேர் அந்த காரில் வருகிறார்கள். வழிவிடும்படி தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டே இருக்கிறார் அந்த கார் டிரைவர்.
ஆனால், கதிரேசகுமார் காருக்கு வழி விடாமல் நடு ரோட்டிலேயே சென்று கொண்டிருக்கிறார் கதிரேச குமார். காரில் வந்தவர்களுக்கு பொறுமை தாங்க முடியாமல் காரை விட்டு இறங்கி கதிரேச குமாரிடம் ஓரமாக செல்லுமாறு கூறுகிறார்.
எதற்கும் செவி சாய்க்காத கதிரேச குமார், நடுவழியிலேயே சென்று கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில், காரில் வந்தவர்கள் கதிரேசனை அடிக்கத் தொடங்குகிறார்கள்.
அடிவாங்கிய பிறகும், அந்த காரை பார்த்துக் கொண்டு மீண்டும் நடுரோட்டில் தனது சைக்கிளை போட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு கார் செல்வதற்கு வழிவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்.
எதற்காக அந்த காரை தடுக்கிறார்.?? அந்த காருக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்.? என்பதே படத்தின் கதை.
காரில் கர்ப்பிணி பெண் ஒருவர் இருக்கிறார் ஆனால், இவர் எதற்காக வழி கொடுக்காமல் இருக்கிறார் என்று அவர் மீது நமக்கும் கோபம் வருகிறது. ஆனால், அவ்வளவு அடி வாங்கியும், அந்த காரை விடவில்லையே அப்படியென்றால் ஏதோ ஒரு சங்கதி இருக்கிறது என்று புரிய வைத்து, ஒரு கட்டத்திற்கு மேல் அவர் மீது இரக்கம் ஏற்பட வைத்துவிடுகிறார் இயக்குனர்
படம் முழுவதுமே பேசாமலேயே நகர்த்திச் செல்கிறார். இந்த வயதில் நட்ட நடு காடாக இருக்கும் அந்த இடத்தில், சுள்ளென்று அடிக்கும் வெயிலில் இந்த வயதில் கொஞ்சம் கூட எனர்ஜி குறையாமல் நடித்துள்ளார் கதிரேச குமார்
காரில் வந்த நபர்களும், ஒரு சாமானியன் காரில் வந்து, ஒருவர் வழி விடவில்லை என்றால் எப்படி கோபப்படுவார்களோ, அப்படியாக தங்களது கோபத்தை வெளிக்காட்டும் இடத்தில் இயக்குனரின் இயக்கத்திறமை நன்றாகவே தெரிகிறது. ஊர் விஏஓ’வாக வருபவரும் தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
வயதானவர்கள் எதுவும் செய்ய இயலாதவர்கள் என்று எண்ணுபவர்களுக்கு இப்படம் ஒரு படிப்பினையாக அமையலாம். அஜித்குமாரின் ஒளிப்பதிவு பாராட்டும் படியான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.
கெபியின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. ராஜேஷின் எடிட்டிங் அருமை. மொத்தத்தில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் “கெழப்பய”.