• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் துரைமுருகன் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி

Byவிஷா

Apr 24, 2025

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
1996-2001 ஆண்டுகளுக்கு இடையில் திமுக ஆட்சியில் பொது பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், ரூ.3.92 கோடி அளவிற்கு சட்டவிரோதமாக சொத்துகளை குவித்ததாக, அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் அவரது மனைவி, மகன், மருமகள் உள்ளிட்டோரை வேலூர் நீதிமன்றம் விடுவிப்பு அளித்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை, 2013-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் விசாரணை குறைபாடுகள் குறித்து வாதிடப்பட்டது. மறுதரப்பில், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், சொத்துகள் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டவை என்றும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்புகளையும் கேட்ட நீதிபதி, வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த விடுவிப்பு உத்தரவை ரத்து செய்து, விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.