• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பேரறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற நாள்!

ஒவ்வொரு தினமும் வந்து செல்லும் ஆனால் ஒரு சில தினங்கள் தான் பல வரலாறுகளை வலிகளை நமக்கு நினைவு கூறும்.அப்படி பட்ட தினம் தான் இன்று. இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்று பல பேர் முன் வந்த நிலையில் அன்று பிராமணர் அல்லாத ஒரு கட்சியை நிறுவி அதன் கொள்கை வழி பயணித்து சாமானியர்களையும் அரசியல் பேச வைத்த பேரறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற தினம் இன்று.

ஆம் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக ஆனார்கள்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஒலி முகமது பேட்டையில் நெசவுக்குடும்பத்தில் பிறந்தவர் பேரறிஞர் அண்ணா. குடும்ப ஏழ்மைக்காரணமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக சிறிது காலம் பணியாற்றி பின்னர், பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ., எம்.ஏ., என இரண்டு பட்டங்களை பெற்று ஆங்கிலத்தில் புலமையடைந்தார்.
கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியராக பணியை தொடங்கிய பேரறிஞர் அண்ணாவை, தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகள் கவர்ந்தன. தந்தை பெரியாருடன் இணைந்தார். ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழுக்காக சிறை சென்றார்.


தந்தை பெரியாருடன் ஒரு சேர பயணித்தாலும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்து, 1962 ஆம் ஆண்டு, மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, நாடாளுமன்றத்தில் தென்னகத்தின் உரிமையை நிலைநாட்ட எழுச்சியுரைகளை ஆற்றினார். அவரின் பேச்சைக் கேட்டு வடநாட்டு உறுப்பினர்கள் வாயடைத்து போயினர். பேரறிஞரின் வாதத்திறனை கண்டு பண்டித நேரு உட்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் வியந்தனர்.
பின்னர் 1965 ஆம் ஆண்டு மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கடும் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபட்டது. தமிழர் நலனே குறிக்கோளாக கொண்ட தி.மு.கழகத்தினர் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டு தமிழ்நாட்டோர் கொதித்தனர். மேலும், இந்தி திணிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை தமிழ்நாட்டு மக்களைப் பாதித்தது.
இதன்விளைவு 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக ஆனார்கள்.
6-3-1967-ல், இந்தியப் பொதுத் தேர்தல் ஜனநாயக வரலாற்றில், முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த அரிய சாதனையைப் படைத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகவும், தலைவர் கலைஞர் உள்ளிட்டோர் அமைச்சர்களாகவும், தமிழில் பதவியேற்பு நிகழ்வினை நடத்தி, உளமார உறுதிமொழி கூறிப் பொறுப்பேற்ற நாள் இன்று.
பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது, புரோகிதர்கள் இல்லாமல் நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டது. சிக்கன நடவடிக்கையாக அமைச்சர்களின் ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் உள்ள தமது எளிமையான வீட்டிலேயே பேரறிஞர் அண்ணா வாழ்ந்தார்.