• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்…

ByT.Vasanthkumar

Apr 8, 2025

பெரம்பலூர் மாவட்டம் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 781 நபர்களுக்கு ரூ.34.05 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் தலைமையில் இன்று (08.04.2024) நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எல்லாத் துறைகளும் மிகப்பெரிய மாற்றமும், ஏற்றமும் கண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒவ்வொரு திட்டங்களும், நடவடிக்கைகளும் தமிழ்நாட்டை கடந்து பல்வேறு மாநிலங்கள் பின்பற்றக்கூடிய, பாராட்டக்கூடிய அளவில் உள்ளது. சில திட்டங்கள் நாடு கடந்து பாராட்டு பெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொழிலாளர் நல வாரியத்தில் சுமார் 20 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக இணைந்துள்ளனர். தொழிலாளர் நல வாரியத்தின் சார்பாக வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை, ஓய்வூதியம் என அனைத்து உதவித்தொகைகளும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. ஊரில் உள்ள அனைவருக்கும் வீடு கட்டி தரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் 300 சதுர அடி உள்ளவர்களுக்கு, 4 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் திட்டம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, கட்டுமான தொழிலாளர்கள் வேறு மாவட்டத்தில் கட்டுமான பணிக்குச் சென்று இறந்து விட்டால் சொந்த மாவட்டத்திற்கு எடுத்து வர செலவின உதவித்தொகை, கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கே சென்று மருத்துவ உதவிகள் செய்யும் வகையிலான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் 57,894 நபர்கள் உறுப்பினர்களாகவும், அமைப்புசாரா வாரியத்தில் 17,006 நபர்களும், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் தானியங்கி நல வாரியத்தில் 3,064 உறுப்பினர்கள் என 77,964 நபர்கள் உறுப்பினராக உள்ளனர். உறுப்பினர்களுக்கு 01.04.2024 முதல் 31.03.2025 வரை அதாவது கடந்த நிதியாண்டில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், முடக்க ஓய்வூதியம் ஆகிய நிதி உதவி திட்டத்தின் கீழ் 27,632 நபர்களுக்கு 13.48 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்று 781 பயனாளிகளுக்கு ரூ.34,05,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தவர்களின் பாதுகாப்பினை கருதி ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் இல்லம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் தொழிலாளர் நல வாரியத்தில் விதிமுறைகளை திருத்தி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் என்றைக்குமே நாம் நன்றி உடையவர்களாக இருப்பது தான் இது போன்ற திட்டங்களை அறிவித்ததற்கு நாம் வழங்கும் நன்றிக்கடனாக இருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் 656 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.17,42,600மும், 50 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.9,81,000 மும், 11 பயனாளிகளுக்கு இயற்கை மரண உதவித் தொகையாக ரூ.6,05,000மும், 64 ஓய்வூதிய உதவித்தொகையாக ரூ.76,,800 மும், என மொத்தம் 781 பயனாளிகளுக்கு 34,05,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் தனித்தனி நல வாரியங்கள் செயல்படுகின்றது. தொழிலாளர் துறைக்கு மட்டும் 18 வகையான நல வாரியங்கள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றது. அந்த வாரியங்களில் பதிவு செய்கின்ற தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் வாரியத்தின் அனைத்து திட்ட பயன்களும் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டிருக்கின்றது.
தற்போது எட்டு வகையான புதிய திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். கடந்த நான்காண்டு காலத்தில் 20 லட்சம் தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் எடுத்துக் கொண்டால் ஏறத்தாழ 2,500 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன இது மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும் இந்த காலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஒரு பொற்காலம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத முழு திட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கின்றது. எல்லா திட்டங்களுக்கும் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக இருக்கின்றது தமிழ்நாட்டுடைய முதலமைச்சர் அவர்கள் தான் வழிகாட்டியாக இருக்கின்றார்கள். மத்திய அரசின் ஆய்வறிக்கையில் எல்லா நிலையிலும் சீரான பொருளாதாரம் வளர்ந்த மாநிலங்கள் பட்டியலில் 9.69 விழுக்காடு பெற்று தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கின்றது நான்காண்டு காலத்தில் சீரான வளர்ச்சியை பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இப் பெருமை எல்லாம் நம்முடைய முதல்வரைத்தான் சேரும் அதற்காக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தொழிலாளர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வாதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொழிலாளர் உதவி ஆணையர், (சமூக பாதுகாப்பு திட்டம்) மு.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், தொழிலாளர் உதவி ஆணையர், (அமலாக்கம்), க.மூர்த்தி மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.