கள்ளர் பள்ளிகளை, பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் முடிவதற்குள் அரசு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை, இல்லையெனில் அதிமுக தொடர்ந்து போராடும் என உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கணூரணியில் வரும் 24ஆம் தேதி கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் மதுரை, தேனி, திண்டுக்கல் என மூன்று மாவட்டத்தின் சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தின் பிரச்சார வாகனத்தை இன்று உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,
தியாகத்தையும், உழைப்பையும், வரலாற்று சின்னங்களாக இருக்கும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை மாற்றும் முயற்சி நிர்வாக மாற்றம் என்று கடந்து செல்ல முடியாது, இது ஒரு தியாக வரலாற்றை அளிப்பதற்கான முயற்சி இதை வண்மையாக எடப்பாடி பழனிச்சாமி 17.08.2024 அன்று கண்டன அறிக்கை வெளியிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரிக்கை செய்தார்கள்.

இருந்த போதும் இந்த அரசு செவி சாய்க்கவில்லை, ஆகவே தான் நாங்கள் காவல்துறையில் உரிய அனுமதியை பெற்று வரும் 24.08.2024 அன்று செக்காணூரணியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்., அதிமுக அறவழியில் இன்று ஒட்டுமொத்த இந்த மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும், உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் போராடி வருகிறது.

1920-ல் நடந்த கைரேகை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெருங்காமநல்லூரில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி, ஒன்றே கால் கோடியில் நினைவு இல்லம் எனும் தியாக வரலாற்றின் அடையாள சின்னமாக பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபத்தை அமைத்து கொடுத்தார்கள்.
அப்படி தியாக வரலாற்றில் வழிவந்துள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை இன்று நிர்வாக மாற்றம் என சொல்லி வரலாற்றை அழிக்க துடிக்கும் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத அறப்போராட்டம் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து மாபெரும் வெற்றி போராட்டமாக அமையும்.
இந்த உண்ணாவிரத போராட்டம் முடிவதற்குள் அரசு செவி சாய்த்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை, அப்படி இல்லையென்றால் எங்கள் மூத்த நிர்வாகிகளிடம் கலந்து பேசி அரசு எப்படி நடவடிக்கை எடுக்கிறதோ அதை பொறுத்து இந்த உரிமையை நிலை நாட்டும் வரை அதிமுக தொடர்ந்து போராடும் என பேட்டியளித்தார்.