நாளை விஜயதசமியை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் சேர்க்கைக்காக தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி பண்டிகையின் போது தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். அன்றைய தினம் தங்கள் குழந்தை படிப்பை தொடங்கும் பட்சத்தில் கல்வியில் தங்கள் குழந்தை சிறந்து விளங்கும் என்று நம்புகின்றனர்.
இதனைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் பலவும் பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆயத்தம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் முனைப்பில் இந்த ஆண்டு விஜயதசமி தினத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், மாணவர்களுக்கு பயன் அளிக்கவும், அரசுப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு முடித்து கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் மருத்துவம் உள்ளிட்ட மேல்நிலைப் படிப்புகளில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இடஒதுக்கீட்டில் மேல்நிலைப் படிப்பை தொடரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி, விடுதி செலவை அரசே ஏற்று வழங்குகிறது.
இதுபோன்ற பல்வேறு உத்திகளை பயன்படுத்தி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் முன்னாள், தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வரிசையில் தற்போது விஜயதசமி பண்டிகையின் போது பள்ளிகளை திறந்து, மாணவர் சேர்க்கையில் ஈடுபட அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
