பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் மிக கவனமுடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்.
கல்வி ஒன்றே வாழ்வை தீர்மானிக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கல்விக்கு மிகப்பெரும் பங்கு. பல கனவுகளோடு படிக்க சென்ற மாணவி ஶ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் தமிழக மக்களின் கண்ணீர் அஞ்சலிகளுக்கிடையே 10 நாட்களுக்கு பிறகு இன்று உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குழந்தைகள் கண்ணாடி கோப்பையை போன்றவர்கள் என்றும் குறிப்பாக பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமுடன் கையாள வேண்டும் என புதுச்சேரி துனை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி ஏற்பாடு செய்த மனிதநேய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பணியாற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது வழங்கிய பிறகு பேசிய தமிழிசை சவுந்திரராஜன், குழந்தைகள் எப்பொழுதும் தங்களது மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்க கூடாது என்றும் வாழ்க்கை என்பது வாழ்வதற்காக மட்டுமே முடித்து வைப்பதற்கு அல்ல என்று கூறினார். குழந்தைகள் கண்ணாடி கோப்பையை போன்றவர்கள் என தெரிவித்தவர், குறிப்பாக பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமுடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார். கண்ணாடி குடுவைகளை பத்திரமாக பிடிக்க வேண்டும் என தெரிவித்தவர், அழுத்தி பிடித்தாலும் உடைந்து விடும், சரியாக பிடிக்கவில்லையென்றாலும் கீழே விழுந்து உடைந்து விடும் என கூறினார். எனவே குழந்தைகளை கண்ணாடி குடுவைகளை விட பதமாக கையாள வேண்டும் என ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார். மற்றும் தற்கொலை என்றுமே தீர்வு இல்லை, அதனை மனதில் வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.