காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற புறநானாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அபயஹஸ்த முத்திரையுடன் அருள் பாலிக்கிறார்.

ஆலயத்திற்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக சனிக்கிழமை தோறும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து நளன் குளத்தில் நீராடி சனிபகவானை தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாலயத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும் சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு வீதிகளில் கூடி நளன் குளத்தில் நீராடி சனிபகவானை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

வரும் மார்ச் 6-ஆம் தேதி காலை 8.24 மணிக்கு சனீஸ்வர பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்நிலையில் சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாக திருநள்ளாறு நளத்தீர்த்த குளத்தில் சப்த நதிகளான கங்கா யமுனா கோதாவரி கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை நளத்தீர்த்த குளத்தில் கலந்து கங்கா ஆரத்தி நடைபெற்றது.

இதற்காக திருநள்ளாறு கோவிலில் இருந்து தெற்கு வீதி வழியாக 27ஆவது அருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அமைச்சர் திருமுருகன் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் மங்கள வாத்தியங்கள் முழங்க அஷ்ட பிராணிகள் சூழ வலம் வந்து நளத்தீர்த்த குளக்கரையில் கரையில் மகா கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரே நேரத்தில் 7 நதிகளுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.






