


நூறுநாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதி ரூ.2,999-யை மத்திய அரசு விடுவித்துள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ரூ.2,999 கோடியை விடுவித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில், மத்திய அரசின் மிகப்பெரிய புரட்சிகரமான திட்டங்களில் ஒன்று தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்.
உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆகஸ்ட் 23, 2005 அன்று ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்’ என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ் வரும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். இது ஆரம்பத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற பெயரில் தான் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு, 2009 ஆம் ஆண்டு வந்த காந்தி ஜெயந்தியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த திட்டம் முதன் முதலில் பிப்ரவரி 2, 2006 அன்று ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் தான் அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது. அதன் பிரகு இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தமிழகத்தில் இந்த திட்டத்தை ‘100 நாள் வேலை திட்டம்’ என்று அழைப்பர். கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளியோர் மற்றும் வயதானவர்களுக்கு 100 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது தான்.
இதன் மூலம் கிராமப்புறங்களில் இன்றளவும் நிலவும் வறுமையை படிப்படியாக ஒழிக்கவும் முடியும். அதோடு, கிராமப்புறங்களில் கேட்பாடற்று கிடக்கும் ஏரி, குளம், குட்டைகளை தூய்மைப்படுத்துவது, சாலைகளை சீரமைப்பது, நீர்ப்பாசன வசதிகளை உருவாக்குவது போன்றவற்றின் மூலம் கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் குறிக்கோளாகவும் உள்ளது.
அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (ஆபுNசுநுபுயு) எனப்படும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 91 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு வழங்கத் தமிழகத்திற்குத் தரவேண்டிய ரூ.4 ஆயிரத்து 34 கோடி நிதியை மத்திய அரசு வழங்காமல் தமிழ்நாட்டைத் தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து மத்திய பாஜக அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி (29.3.2025) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி ரூ. 2 ஆயிரத்து 999 கோடி விடுத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் நிலுவையில் இருந்த ரூ. 4 ஆயிரத்து 34 கோடியை விடுவிக்க வேண்டும் எனத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ரூ.2 ஆயிரத்து 999 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


