• Tue. Feb 18th, 2025

அதிமுகவில் முதல்முறையாக பெண் ஒருவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி..!

Byவிஷா

Sep 28, 2023

அதிமுகவில் முதல்முறையாக பெண் ஒருவரை மாவட்டச் செயலாளராக நியமனம் செய்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுகவுக்குள் அமைப்பு ரீதியாக மாற்றங்களை மேற்கொள்ளவும், மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருந்தார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் 5 மாவட்டச் செயலாளர்கள் சென்ற நிலையில், அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டச் செயலாளராக முன்னாள் துணை மேயர் சீனிவாசன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை ரா. தமிழ்ச்செல்வன், குமரி மாவட்டச் செயலாளராக தளவாய் சுந்தரம், தேனி மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ஜக்கையன், திருவண்ணாமலை போளூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எல்.ஜெயசுதா, திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் முதல் முறையாக பெண் மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜெயலலிதா இருந்த போது போளூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைப்பு ரீதியாக அதிமுகவின் மாவட்டங்கள் 75-ல் லிருந்து 82 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.