மாண்டஸ் புயல் காரணமாக கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக கொடைக்கானலில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசியதால் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. அந்த இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர்
மற்றும் வனத்துறையினர் சென்று முறிந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குணா குகை, தூண்பாறை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலில் படகு குழாம், சைக்கிள் சவாரி, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது.
கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு
செல்ல பொதுமக்களுக்கு தடை





