தேனி மாவட்டத்தில் மீன் கடைக்காரரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலரான சண்முகம், கடந்த மாதம் தேனி நகராட்சி அலுவலகம் பின்புறமுள்ள மீன்கடையில் ஆய்வு மேற்க்கொண்டார்.
திருமலை பால்பாண்டி என்பவருக்கு சொந்தமான இக்கடையில் மீன்கள் அனைத்தும் சுகாதாரமற்று இருப்பதாகவும், சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க அதன் மீது சில ரசாயனம் கலந்திருப்பது
தெரியவந்துள்ளது எனவும் சண்முகம் கூறியுள்ளார். இதற்கு அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதற்கு கடைக்காரர் சம்மதிக்காததால், ரூ. 10 ஆயிரம் தரும்படி மீண்டும் கூறியுள்ளார். இது பற்றி திருமலை பாண்டி தேனி லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அதிகாரிகளின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 10 ஆயிரத்தை நேற்று தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலத்திற்கு சென்று சண்முகத்திடம் வழங்கினார். பணம் வாங்கிய சண்முகத்தை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., கருப்பையா தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரியா மற்றும் போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.