தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை பகுதியில் வேளாண் குளம் அமைந்துள்ளது இந்த குளத்தில் தேக்கி வைக்கப்படும் நீரை பயன்படுத்தி 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் குளத்தில் மூன்று முதல் ஐந்து அடி உயரத்திற்கு மண் மேவியதால் அதிக நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் குளத்தில் விவசாயிகள் மண் எடுப்பதற்கு அரசு அனுமதி அளித்தது.
இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் குளத்தில் உள்ள மண்ணை எடுத்து நிலங்களில் கொட்டி வந்தனர்.

இந்த நிலையில் அந்த குளத்தில் ஒரே பகுதியில் 30 அடி ஆழத்திற்கு மேல் மண் வெட்டி எடுத்து வருவதை கண்ட அப்பகுதி விவசாய சங்கத்தினர் மண் வெட்டி எடுத்து வந்தவர்களிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவல் அறிந்து பெரியகுளம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் வருவதை அறிந்த நிலையில் குளத்தில் மண் வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டர்களுடன் மண்வெட்டி எடுத்த நபர்கள் தப்பி ஓடினர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் விவசாய சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக விவசாய சங்கத்தினர் கூறுகையில் விவசாயத்திற்கு நீர் திறக்கப்படும் மதகுப்பகுதி 40 அடி உயரத்திற்கு மேல் மண் இருந்த நிலையில் விவசாயத்திற்கு நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது அப்போது அரசு அனுமதியுடன் விவசாயிகள் மண் எடுத்து வந்தனர் அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
ஆனால் ஒரே இடத்தில் 40 அடி ஆழம் வரை மண்வெட்டி எடுப்பதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லாத நிலையில் குளத்தில் 5 அடி ஆழம் வரை மட்டுமே மண் எடுக்க வேண்டும் எனவும்,
தற்பொழுது ஒரே இடத்தில் 40 அடி ஆழத்திற்கு மண் வெட்டி எடுத்த இடத்தை சமப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.