• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது விசாரணை தேவை!

Byகுமார்

Feb 8, 2022

சட்டவிரோத பணபரிவர்த்தனை மூலம் பணம் பெற்று தமிழகத்தில் உருவாகும் பல உற்பத்தி நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு குரல் கொடுத்துவரும் போலியான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொது நல வழக்குகள் தொடரும் வழக்கறிஞர்கள் குழு சார்பாக வழக்கறிஞர் முத்துக்குமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்!

மதுரை செய்தியாளர்கள் சங்க அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுநல வழக்குகளை தொடரும் வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் பேசுகையில், ‘தொழில்துறையில் இந்தியாவில் குறிப்பாக தென் தமிழகம் தன்னிறைவு பெறாமல் இருக்கிறது. அதற்கு தென் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய தொழிற்சாலைகள் இந்த பகுதியில் இல்லாததே காரணம்

குறிப்பாக கூடங்குளம் அனல் மின் நிலையம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகள் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து வந்த நிலையிலும் பொருளாதாரத்தில் அந்த பகுதியை மேம்படுத்திய நிலையிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் போராட்டங்களை முன்னெடுத்து அதுபோன்ற தொழிற்சாலைகளை மூடுவதற்கு உற்பத்தியை நிறுத்துவதற்கும் காரணமாக இருந்தார்கள். இதுபோல தற்சமயம் சோலார் மின்சக்தி என்பது மக்களுக்கு கண்டிப்பான ஒன்றாகிவிட்ட நிலையில் தென் தமிழகத்தில் சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்கும் நிறுவனங்கள் தரிசு நிலங்களை விலைக்கோ அல்லது ஒப்பந்தத்தின் பெயரிலோ வாங்கி அதை சோலார் மின்சக்தி தயாரிக்கும் நிறுவனத்திற்கு பயன்படுத்துவதற்கான திட்டங்களை செய்து வருகிறார்கள்

இதில் அந்த பகுதி மக்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் அந்த பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் போராட்டங்களை நடத்தி இதுபோன்ற தொழிற்சாலைகளையும் தென் தமிழகப் பகுதிக்கு வர விடாமல் தடுப்பதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்

தென் தமிழகப் பகுதியில் BE படித்தவர்கள் கூட துப்புரவுத் தொழில் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது இளைய சமுதாயம் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். மக்களுக்கு தவறான செய்திகளை பரப்பி தவறான முன்னுதாரணங்களை காரணம் காட்டி போராட்டம் நடத்தி பொருளாதார முன்னேற்றத்தையும் இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் கெடுக்கும் வெளிநாட்டு அந்நிய சக்தியின் பண உதவியை பெற்றுக்கொண்டு போராட்டங்கள் நடத்தும் அமைப்புகளை கண்டறியவேண்டும் கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

அயல்நாட்டு உதவிகளை அயல்நாட்டு பண பரிவர்த்தனைகளை பெற்று போராட்டம் நடத்தும் அமைப்புகளை மாநில உளவுத்துறை கண்காணித்து வருகிறது இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது இதுகுறித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம். எங்களது மனு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரவும் தயாராக இருக்கிறோம்.

சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் போராட்ட பின்னணி கொண்டவர்களின் பண பரிமாற்றம் குறித்தும் அவர்களது அயல்நாட்டு தொடர்புகள் குறித்தும் உளவுத்துறை சரியான தகவல்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என மதுரையில் வழக்கறிஞர்கள் சார்பாக செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் முத்துக்குமார் தெரிவித்தார்.