• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ByP.Kavitha Kumar

Feb 19, 2025

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணை ஆணையராக, ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழு கூடி ஞானேஷ்வர் குமார் பெயரை அறிவித்துள்ளது.

இன்று முறைப்படி பதவியேற்க இருக்கும் ஞானேஷ்குமார், 2029 ஜனவரி 26-ம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிய சட்டம் இயற்றப்படும்வரை, தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிய குழு தேர்வு செய்ய வேண்டும் என்று கடந்த 2023 மார்ச் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர் அடங்கிய குழு, தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.அச்சட்டத்தின் படி, கடந்த ஆண்டு 2 தேர்தல் ஆணையர்களும், நேற்று முன்தினம் தலைமை தேர்தல் ஆணையரும் நியமிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, மேற்கண்ட சட்டம், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று கூறி, ஜனநாயக சீர்திருத்த சங்கம், காங்கிரஸ் பிரமுகர் ஜெயா தாக்குர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல். செய்த மனு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த மனுக்கள், இன்று (பிப்ரவரி 19) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, மனுக்களை அவசரமாக எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முன்னுரிமை அளித்து, இன்று காலையிலேயே மனுக்களை விசாரிப்பதாக தெரிவித்தனர்.