• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருப்பூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு : தலைவர்கள் அதிர்ச்சி

Byவிஷா

Apr 10, 2024

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் ‘எங்களுக்கு சாலை வசதி செய்து தரவில்லை என்றால் நாங்கள் தேர்தலைப் புறக்கணிப்போம் எனத் தெரிவித்திருப்பது தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் 18 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு, 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமங்களில் உள்ள குருமலை, மாவடப்பு, ஈசல்திட்டு, குளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு உரிய சாலைகள் இல்லாததால், அங்குள்ள மக்கள் அனைவரும் அவசர மருத்துவ தேவைகளுக்கு அடர்ந்த காட்டுப் பாதை வழியாகச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், மலைவாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவசர தேவைக்கு உடுமலைக்கு செல்ல கூட சிரமப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த சம்பவத்தில் குளிப்பட்டி செட்டில்மென்ட் மலை கிராமத்தை சேர்ந்த நாகம்மாள் என்ற கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடித்து வந்துள்ளார். சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் உடனடியாக அவரை தொட்டிலில் ஏற்றி கரடுமுரடான காட்டுப் பகுதியில் வைத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதன்பிறகு யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களுக்கு அடிப்படை சாலை வசதி செய்து தரவில்லை என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி சுமந்து செல்வதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். வன உரிமைச் சட்டம், 2006ன் படி, ஒரு ஹெக்டேர் நிலம் ஒதுக்கி, திருமூர்த்தி மலையில் இருந்து குருமலை வரை சாலை அமைத்தால், அரை மணி நேரத்தில் திருமூர்த்தி மலையை அடைய முடியும். இதன் கீழ், மலைவாழ் மக்கள் சாலை வசதி செய்து தரக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த மலைவாழ் மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பு சாலை அமைக்கக்கோரி இரண்டு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலைவாழ் மக்களுக்கு சட்டப்படி சாலை அமைக்கவும், வன உரிமை சட்டப்படி சாலை அமைக்கவும் வனத்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் முயற்சி எடுத்தால் மட்டுமே மலைவாழ் மக்களின் உயிர் காக்கப்படும். அப்போதுதான் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கும். அதேபோல், வனப்பகுதியில் குற்றங்கள் நடந்தால், வனத்துறையினர் விரைந்து வந்து தடுக்க முடியும். எனவே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.