காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் பம்மல் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்குட்பட்ட திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

தெற்கு பகுதி செயலாளரும் மண்டல குழுத் தலைவருமான வே. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தை வடக்கு பகுதி செயலாளர் ஜெய்க்குமார் ஏற்பாடு செய்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் தா.மோ. அன்பரசன், மேயர் வஸந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், திருவடந்தையில் நடைபெறவுள்ள மாவட்ட மாநாட்டில் 49 தொகுதிகளில் இருந்து சுமார் 1.75 லட்சம் பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாநாட்டிற்கு அனைவரும் நேரத்திற்கு முன்பாக வந்து, தலைவர் உரை முடியும் வரை ஒழுங்குடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், கட்சியினர் தினமும் மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்து, சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றுதல், குடிநீர் வசதி சரியாக உள்ளதா என்பதை கண்காணித்தல், சாலை பழுதுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பது போன்ற மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வரவிருக்கும் தேர்தலில் கட்சிக்கு வெற்றி பெற அனைவரும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும், திமுக தொடர்ந்து வலிமையாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக மறைந்த கழக நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பம்மல் வடக்கு, தெற்கு பகுதிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.










