• Thu. May 2nd, 2024

மதுரையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்..!

Byகுமார்

Jun 16, 2023

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சுகாதாரத்துறை உள்ளிட்ட 14 துறைகள் சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள். அரசின் அறிவிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு தலைவரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் தலைமை வகிக்க, இணைத் தலைவர்களான விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் உறுப்பினர் மற்றும் செயலர் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சங்கீதா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்..,
மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள். மாநில அரசின் திட்டங்கள் குறித்து, அவை முறையாக செல்படுத்தப்படுகிறதா, உள்ளாட்சி அமைப்புகளின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதா என்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றார். மேலும், இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் சிரமங்களை ஆராய்ந்து அவற்றை சரிசெய்வதற்கும். அரசு திட்டங்களின் நோக்கத்திற்கு ஏற்றபடி முறையாக பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்க்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டு ஒவ்வொரு ஊராட்சிக்கும் துறை சாரந்த அலுவலர்களுடன் நேரடியாக சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் “மக்கள் சந்திப்பு இயக்கம்” நடத்தப்பட்டுள்ளன என்றும் மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் அதிகளவில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட்டு ரூபாய் 126 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கு கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். அதேபோல, மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில்
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 18 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஏறத்தாழ 2600- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில், மதுரை மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *