சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக, கடந்த 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு இருமுடி கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், சபரிமலை வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சபரிமலையில் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்
