நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டு மனைக்கு மேங்கோ கார்டன் என்ற பெயரில் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய கோரியும், ரவுடிகளோடும், தோட்டா மற்றும் பயங்கர ஆயுதங்களோடும் நல்லாம்பாளையம் பகுதியில் அராஜகம் செய்து கொலை மிரட்டல் விடுத்த குமாரபாளையம் திமுக நகர மன்ற தலைவர் விஜய கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .முன்னதாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில்50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் சர்வே எண் 532 /4, 5 உள்ள மேட்டூர் கீழக்குகரை வாய்க்கால் பாசனத்தின் ஆயக்காட்டூர் நிலத்தில் பி.ஜே.பி. நாகராஜ், வருவாய்த்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள். உள்ளாட்சித் துறை, தட்டாங்குட்டை ஊராட்சி நிர்வாகம் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்து பொய்யான போலி ஆவணங்களை (தெரு விளக்கு, சாக்கடை, குடிநீர் வசதி, தார்சாலை, கழிப்பிட வசதி, பொது இடம் ஒதுக்குதல் போன்ற வசதிகள் செய்ததாக) வழங்கி அனுமதி பெறப்பட்டுள்ளது சம்மந்தமாக இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பையும் பல கட்ட போராட்டங் களையும் நடத்தியுள்ளது.
சட்டவிரோத அனுமதியை ரத்து செய்யவும், சட்டவிரோத அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு எண் WP No. 16052 2024 தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், குமாரபாளையம் திமுக சேர்மன் விஜய கண்ணன் தலைமையில் ரவுடி கும்பலுடன் மேங்கோ கார்டன் பகுதியில் நுழைந்து கையில் தோட்டா வீச்சருவாள் கத்தி போன்ற ஆயுதங்களுடன் சட்டவிரோத வீட்டு மனை பிரிவில் வீடு கட்ட முயற்சி செய்ததாகவும். அதை தடுக்க சென்ற பொதுமக்கள், விவசாயிகள், கம்யூனிஸ்ட் கட்சியினர், மாதர் சங்க அமைப்பினரை கொலை மிரட்டல் விடுத்து தோட்டாவைப் போட்டு கொன்று விடுவேன் என கடுமையாக மிரட்டியும் விஜய கண்ணன் மற்றும் ரவுடி கும்பல் துரத்தியதாக அங்கு இருந்த காவல்துறையினரும் பொதுமக்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்றும் இங்கிருந்து ஓடி விடுங்கள் என்று ரவுடி கும்பல் மிரட்டியதாகவும், ஆனால் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கும்பலின் தலைவனாக செயல்பட்ட குமாரபாளையம் நகர் மன்ற தலைவர் விஜயகண்ணன் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட ரவுடிகள் மீது எவ்வித நடவடிக்கையும் காவல் துறை இதுவரை எடுக்கவில்லை.
சட்டவிரோத அனுமதி வழங்கிய வருவாய்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கியுள்ளனர்.