மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.புதுப்பட்டி கிராமத்திலிருந்து ஏ.கிருஷ்ணாபுரம், காக்கிவீரன்பட்டி, காமாட்சிபுரம் கிராமங்களுக்கு குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த குடிநீர் குழாய் தனது பட்டா இடத்திற்குள் செல்வதாக ஏ.புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜாகிளி என்பவர் குழாயை அடைத்து வைத்துவிட்டு கட்டுமான பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த மூன்று கிராமங்களுக்கும் முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், தனிநபர் இடத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாயை மாற்று வழியாக கொண்டு சென்று கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி இன்று இந்த மூன்று கிராம மக்களும் காலி குடங்களுடன் பாப்பாபட்டி – உசிலம்பட்டி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியலால் உசிலம்பட்டி பாப்பாபட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
