தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
அதன்படி இந்த மாதம், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது. வணிக சிலிண்டரின் விலை கடந்த ஜூலை மாதம் முதலே மாதந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
கடந்த மாதம் வணிக சிலிண்டரின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. வணிக சிலிண்டர் கடந்த டிசம்பர் மாதம் ரூ.1980-க்கும், ஜனவரி மாதத்தில் ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திலும் விலை குறைந்து ரூ.1,959-க்கு, மார்ச் மாதத்தில் ரூ.1965க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் அதிரடியாக விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.