• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

Byவிஷா

Jul 4, 2025

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.2,620 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக கூகுள் நிறுவனத்துக்கு 314.6 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.
2019ல் தொடங்கப்பட்ட இந்த வழக்கு, கலிபோர்னியாவைச் சேர்ந்த சுமார் 14 மில்லியன் ஆண்ட்ராய்டு பயனர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, கூகுள் அனுமதியின்றி, ஃபோன்கள் பயன்பாட்டில் இல்லாதபோதும் தகவல்களை சேகரித்து, விளம்பரங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கில், ஆண்ட்ராய்டு ஃபோன்கள் செயலற்ற நிலையில் இருக்கும்போதும், கூகுள் பயனர்களின் தரவுகளை சேகரித்து, அவர்களின் செலவில் மொபைல் டேட்டாவை பயன்படுத்தியதாக வாதிடப்பட்டது. இந்த தரவுகள், கூகுளின் இலக்கு விளம்பரங்கள் மற்றும் வரைபட சேவைகளை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டன. கூகுள் தரப்பில், பயனர்கள் தங்கள் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதால், இந்த தரவு சேகரிப்புக்கு அனுமதி பெற்றதாகவும், இதனால் எந்த பயனருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வாதிட்டது.
இருப்பினும், நீதிமன்றம் பயனர்களின் அனுமதியின்றி தரவு சேகரிக்கப்பட்டதாக தீர்ப்பளித்தது. கூகுள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், கூகுள் பேச்சாளர் ஜோஸ் காஸ்டனெடா, இந்த தரவு பரிமாற்றங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன்களின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மைக்கு அவசியமானவை எனவும் தீர்ப்பு இதை தவறாக புரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு கலிபோர்னியா மாகாண பயனர்களை மட்டுமே உள்ளடக்கியது என்றாலும், மற்ற 49 அமெரிக்க மாகாணங்களைச் சேர்ந்த ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக இதேபோன்ற மற்றொரு வழக்கு சான் ஜோஸ் கூட்டாட்சி நீதிமன்றத்தில் 2026 ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த தீர்ப்பு, தனியுரிமை மற்றும் தரவு பயன்பாடு தொடர்பாக பெரு நிறுவனங்களின் செயல்பாடுகளை கேள்விக்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளது.
பயனர்களின் தரவு சேகரிப்பு தொடர்பாக வெளிப்படைத்தன்மை மற்றும் அனுமதி முக்கியம் என்று இந்த வழக்கு வலியுறுத்துகிறது.கூகுளுக்கு இந்த அபராதம் நிதி ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இது எதிர்காலத்தில் தரவு தனியுரிமை குறித்த வழக்குகளுக்கு முக்கிய முன்னுதாரணமாக அமையலாம். கலிபோர்னியாவில் வெற்றி பெற்ற இந்த வழக்கு, மற்ற மாகாணங்களில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களையும் இதேபோன்ற கோரிக்கைகளை முன்வைக்க ஊக்குவிக்கலாம்.