• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மின்சக்தித் துறைக்கான ‘கோர்ஸ்’ அமைப்பு கோவையில் துவக்கம்..,

BySeenu

Jan 11, 2026

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மற்றும் மின் தீர்வு துறைகளை ஒருங்கிணைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட Confederation of Renewable Power & Energy Solutions (CORES) அமைப்பின் தொடக்க விழா இன்று ஜெனீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சோலார், யுபிஎஸ், பேட்டரி, ஸ்டெபிலைசர் மற்றும் மின் தீர்வு துறைகளில் செயல்படும் தொழில்முனைவோர், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே மேடையில் இணைத்து, துறை வளர்ச்சி, கொள்கை ஆலோசனை, தொழில்நுட்ப முன்னேற்றம், நெறிமுறை வணிக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு ஆகியவற்றை முன்னெடுப்பதே கோர்ஸ் அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

இவ்விழாவில், முதன்மை விருந்தினராக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான கே.அண்ணாமலை கலந்து கொண்டு கோர்ஸ் அமைப்பின் லோகோ மற்றும் இணையதளத்தை வெளியிட்டார்.
பின்னர் தொடக்க உரையாற்றி, நாட்டின் வளர்ச்சியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் அவசியம் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்தார்.

மேலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) முன்னாள் தலைவர் எம். சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். விழாவின் முக்கிய நிகழ்வாக, கோர்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் பதவியேற்பு நடைபெற்றது.கோர்ஸ் அமைப்பின் தலைவராக எஸ்.சஞ்சய், துணைத் தலைவர்களாக எம்.அண்ணல் மற்றும் கே.சிவகுமார், பொதுச் செயலாளராக எஸ். லெனின் சுந்தரம், பொருளாளராக ஏ.செந்தில் குமார், இணைச் செயலாளராக யு.அல்தாப் ஷெரிப் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, கோர்ஸ் அமைப்பின் தொலைநோக்கு, இலக்கு மற்றும் செயல் திட்டங்கள் விளக்கப்படுவதுடன், தமிழ்நாட்டின் மாறிவரும் மின்சார சூழல் குறித்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின் தீர்வு துறைகளில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசுகையில், கோர்ஸ் நிர்வாகம், நெறிமுறை வணிக நடைமுறைகள், திறன் மேம்பாடு, கொள்கை உரையாடல், தொழில்நுட்ப விழிப்புணர்வு மற்றும் பல்வேறு சங்கங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதுடன், சுத்தமான, நிலையான மற்றும் மலிவான ஆற்றல் தீர்வுகள் நோக்கி அரசின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு வழங்குவதே அமைப்பின் நோக்கம் என தெரிவித்தது.

விழாவில் தொழில் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள், தொழில்முனைவோர், சிஸ்டம் இன்டிக்ரேட்டர்கள், உற்பத்தியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் தமிழ்நாடு முழுவதும் இருந்து
பங்கேற்றனர்.