பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ஐந்தரை கோடி ரூபாய் கிடைத்தது.
பழனி முருகன் கோயிலில் நேற்றும், இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. சித்திரை மாத திருவிழா மற்றும் பள்ளி கல்லூரிகள் தொடர் விடுமுறை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் உண்டியல்கள் நிரம்பி வழிந்தது. இதனை முன்னிட்டு, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் கோயில் பணியாளர்கள் வங்கி ஊழியர்கள் கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 5 கோடியே 42 லட்சத்து 62 ஆயிரத்து 088 ரூபாயும், தங்கமாக 1131 கிராம்,
வெள்ளியாக 21,324 கிராம், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இத்தாலி உள்ளிட்ட
வெளிநாட்டு கரன்சி 1610 நோட்டுகள் கிடைக்கப்பெற்றது. மேலும் பக்தர்கள் செலுத்திய தங்கம், வெள்ளியிலான வேல், தாலிச்செயின், தங்கக்காசு, சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன.
