• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் களியக்காவிளையை அடுத்த தையாலுமூட்டில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அஜய் தலைமை தாங்கினார். விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் விமல் ராஜ், துணைத்தலைவர் விஜின், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் திபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பேசினார். அவருக்கு செண்டை மேளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது ;

இங்கு தேசம் காப்போம் என்னும் போராட்டத்தை இளைஞரணி சார்பில் நடத்தப்படுகிறது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கியதால் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தத் திட்டம் மன்மோகன் சிங் அவர்களின் திட்டம், அன்னை சோனியா காந்தி அவர்களின் கனவு திட்டம் , ஏழை மக்களுக்கு 100 நாட்கள் ஊதியத்தை வழங்க வேண்டும் , வேலையை வழங்க வேண்டும் அதனால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட வேண்டும் என்பது அதன் நோக்கம், பாஜக அரசின் நோக்கம் காங்கிரஸ் கொண்டு வருகின்ற திட்டங்களை அவர்கள் கொண்டு வந்ததாக காட்ட வேண்டும் என முயற்சி செய்கிறார்கள். இந்தத் திட்டத்தின் பெயரை விபி ஜி ராம் எனக் கொண்டு வந்துள்ளனர். எதற்காக இந்த பெயரை வைத்துள்ளார்கள் என யாருக்கும் தெரியாது.

மகாத்மா காந்தி அவர்களுடைய பெயரை நீக்க வேண்டும், இந்தத் திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம், இந்தத் திட்டத்தில் 90% மத்திய அரசின் பங்களிப்பாக இருந்து வந்தது. தற்போது மத்திய அரசு 60 சதவீதமும் , மாநில அரசு 40 சதவீதமும் என்ற அடிப்படையில் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை நிறுத்தினால் பிரச்சனை ஏற்படும் என நினைத்து , தானாக இந்த திட்டத்தை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். வரலாற்றை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சவார்க்கரை பெரிய ஹீரோ போன்று சித்தரித்து வருகின்றனர். மோடி அவர்கள் பாராளுமன்றம் வருவது கிடையாது .வந்தால் இந்திராகாந்தியையோ நேருவையோ குறை கூறாமல் இருக்க மாட்டார். அவர்கள் காங்கிரஸ் அரசு மக்களுக்கு செய்த தொண்டுகளை மறக்கடிப்பதற்காக பல வேலைகளை செய்து வருகின்றனர்.

ஆனால் மக்களிடம் தோளோடோ தோளாக தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ராகுல் காந்தி அவர்களை பிரதமராக ஆக்கும் வரை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் காங்கிரசின் பெருமைகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டத்தில் மத்திய பாஜக அரசு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த போராட்டத்தில் களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் , அகில இந்திய பொதுக் குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாநில பொதுசெயலாளர் ரமேஷ்குமார்,
மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.