சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை ஏற்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று நகரின் முக்கியப் பகுதியான அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவர் பென்னட் ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் மாவட்டத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மத்திய அரசின் மெத்தனப் போக்கினால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் கண்டிக்கும் விதமாக, காங்கிரஸ் மகளிர் அணியினர் மிகுந்த ஆவேசத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைச் சித்தரிக்கும் வகையில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து, அதற்கு ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், கியாஸ் சிலிண்டர் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஏழை எளிய மக்கள் தள்ளப்பட்டுள்ளதை உணர்த்தும் வகையில், சாலையிலேயே விறகுச் சுள்ளிகளை வைத்து அடுப்பு மூட்டி எரித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

சாதாரண மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை உடனடியாகச் சீர்செய்ய வேண்டும் என்றும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அண்ணா சிலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் திரளாகக் கலந்துகொண்டனர்.



