அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒப்பந்தகாரர்கள் அத்துமீறி செயல்பட்டு தங்களை மிரட்டுவதாக கூறி ஆண்டிப்பட்டி ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்ட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான டெண்டர் நேற்று முன்தினம் ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த டெண்டரில் ஆளும்கட்சி நிர்வாகிகள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், குறிப்பிட்ட சில ஒப்பந்தகாரர்கள் அத்துமீறி செயல்பட்டு தங்களை மிரட்டுவதாகவும் ஊராட்சித் தலைவர்கள் புகார் கூறிவந்தனர். இந்நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஊராட்சித்தலைவர்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். மேலும் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தி.மு-.க நிர்வாகிகள் சிலர் தாங்கள் சொல்லும் ஒப்பந்தகாரர்களுக்கு மட்டுமே பணிகளை வழங்க வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 3 ஒப்பந்தகாரர்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அத்துமீறி செயல்பட்டு, தங்களை மிரட்டி வருகின்றனர். எனவே அந்த 3 ஒப்பந்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும். மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் முறையாக டெண்டர் வைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை செய்யவிடாமல் ஒப்பந்தகாரர்கள் மிரட்டுவதாக ஆண்டிப்பட்டி ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் ரத்தினம்,சுமேந்திரன் ,ரம்யா சிவரெங்கு பஞ்சமணி உள்பட 20க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்த சம்பவம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.