விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மண் குண்டம்பட்டி ஓ.பி.ஆர். நகரை சேர்ந்தவர் ஜெயராமன் இவரது மகள் லட்சுமி இவர் மாற்றுத்திறனாளி. இவருக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு செல்வம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் செல்வம் திடீரென உடல் நலக் குறைவினால் காலமானார். மாற்றுத்திறனாளி லட்சுமி கர்ப்பமாக இருந்ததாலும் வறுமையில் இருந்தாலும் அவருக்கு உதவ வேண்டுமென ஜெயராமன் மற்றும் ரகுபதி ஆகியோர் கலெக்டர் சுகபுத்ராவிடம் நேரில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட லட்சுமியை பார்த்ததும் உடனடியாக மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் . மேலும் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து நேரில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி லட்சுமிக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

மேலும் மாற்றுத்திறனாளிக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பரிந்துரை கடிதத்தையும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டியும், குடும்பத்தினரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் சிவகாசி தாசில்தார் லட்சம், உதவி தாசில்தார் முகமது இப்ராகிம், தாயில்பட்டி வருவாய் ஆய்வாளர் மாரிஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் கணேசன், மருத்துவ அலுவலர் செந்தட்டி காளை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.







