• Sun. May 5th, 2024

கோவை புறக்கணிக்கப்பட்டு வருகிறது- அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி…

BySeenu

Nov 1, 2023

அதிமுக செய்ய தவறியதை திமுக செய்வதற்கு அவர்கள்(அதிமுக) வெட்கப்பட வேண்டும்- கோவை எம்பி பி.ஆர்.நடராஜன்.

கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பங்கேற்காமல் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன்,ஏ.கே.செல்வராஜ்,சிங்காநல்லூர் ஜெயராமன்,கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி.அருண்குமார்,கோவை வடக்கு அம்மன் அர்ச்சுணன்,சூலூர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு வருகை புரிந்த அதிமுக சட்டமன்ற உறுபினர்கள் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காதது கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கூட்டமானது சுமார் 3 மணி நேரம் நடைப்பெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் பங்கு பெறாதது மிகுந்த மன வேதனை அளிக்கிறது எனவும்
அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை எனவும் பதில் கூற அதிகாரிகளும் வரவில்லை என்றார். மேலும் கண்துடைப்பிற்காக நடத்தப்பட்ட கூட்டமாக தான் இருந்தது எனவும் விமர்சித்தார். கோவை மாவட்டம் தொடர்ந்து புறகணிக்கப்பட்டு வருவதற்கு சான்று மாவட்ட ஆட்சியரே கூட்டத்திற்கு வராதது ஒன்று எனவும் சாடினார். மேலும் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதும், மீண்டும் அதிமுக வெற்றி பெரும் என்பதால் எந்த வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை என்றார். அதிமுக ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட 500, ஆயிரம் கோடி பணத்தை வீண் அடித்துள்ளனர் என தெரிவித்த அவர் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் புறநகர் சாலைகள் கைவிடப்பட்டதே உதரணமாக உள்ளது எனவும் அத்திகடவு குடிநீர் திட்டம் இன்னும் நிறைவேற்றபடவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். ஆளுனர் குறித்த கேள்வி எழுப்பியது நன்றி வணக்கம் என பதில் அளித்து சென்றார்.

பின்னர் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கூட்டத்தில் எம்மாதிரியான திட்டங்கள் குறித்து பேசப்பட்டது என தெரிவித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்தும், அதிமுக எம்எல்ஏக்களையும் அதிக அளவில் இருப்பதால் கோவை புறக்கணிக்கப்படுவதாகவும் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்தான கேள்விக்கும் பதிலளித்த அவர், 2019 இல் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் வருடம் அதிமுக ஆட்சியில் இருந்தது எனவும், நான் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற போதிலும் அந்த காலகட்டத்தில் ஒரு அரசு விழாவுக்கும் என்னை அழைக்கவில்லை என தெரிவித்தார். ஜனநாயகத்தை பற்றி பேச இவர்களுக்கு யோகியதையே கிடையாது என சாடிய அவர், அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை எந்த அரசு விழா அழைப்பிதழிலும் எனது பெயரை போடவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் அப்படிப்பட்ட நபர்கள் இன்று ஜனநாயகத்தைப் பற்றி வகுப்பு எடுக்கிறார்கள் என்றார். யாரும் இவர்களது கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்த அவர், இப்போது மாநகராட்சி சார்பில் கொடுக்கப்படும் அழைப்பிதழ்கள் அனைத்திலும் அவர்கள் பெயர் இடம்பெறுவதை கண்டு அவர்கள் தான் வெட்கப்பட வேண்டும் எனக் கூறினார். நாம் செய்ய தவறியதை திமுக அரசின் நிர்வாகம் செய்கிறது என அவர்கள் வெட்கப்பட வேண்டும் விமர்சித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, இந்தக் கூட்டத்திற்கு நான் தான் சேர்மன் , நான் இல்லையென்றால் துணை சேர்மன் ஆக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுவார். மாவட்ட ஆட்சித் தலைவர் இக்குழுவுக்கு செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் இல்லையென்றால் மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது சப் கலெக்டர் கூட்டத்தை நடத்தலாம் என வழிகாட்டு நெறிமுறைகளே உள்ளது என அவர் பதில் அளித்தார்.

5 ஆண்டுகள் பதவியில் இருந்த சூழலில் வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய் அவற்றில் 18 சதவீதம் gst ஆக அதாவது 90 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டியாக சென்று விடுகிறது, 4 கோடியே 10 லட்சம் தான் பணம் கிடைக்கும் என அவர் தெரிவித்தார். 3 ஆண்டுகள் மட்டுமே நிதி கொடுக்கப்பட்டதாகவும், இரண்டு ஆண்டுகள் நிதியை கொரோனா பெயரைச் சொல்லி பிரதமர் எடுத்துக்கொண்டு தனி விமானம் ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டுள்ளார் என விமர்சித்தார். ஆனால் அந்த நிதி தமிழ்நாட்டுக்கு வர வேண்டியது எனவும், மொத்தம் 17 கோடிகள் இந்த ஐந்து ஆண்டுகளில் தமக்கு வழங்கப்பட்டதாகவும் அந்தப் 17 கோடி ரூபாய்க்குமான பணிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் எம்பி நடராஜன் கூறினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த மற்றும் அவர்கள் கேட்ட தொகை வருவதற்கு உண்டான வகையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் நகலை கொடுத்துள்ளோம், மாநில அமைச்சரகத்தின் இடத்தில் இதனை பேசி பரிசீலித்து அமலாக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுப்பதாக மாநகராட்சி ஆணையரும் கூட்டத்தில் தெரிவித்திருப்பதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *