விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பழமை வாய்ந்த சிதம்பரஸ்வேரர் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. தினசரி மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.3–ஆம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.

முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். விழாவில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாள் தரிசனம் செய்தனர்.