• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

யுஜிசியின் நடவடிக்கை ஒரு தலைபட்சமானது… முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ByP.Kavitha Kumar

Jan 7, 2025

கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படும்போது தமிழகம் அமைதியாக இருக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பதில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ” துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலும், கல்வித்துறையை சாராதவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கும் வகையிலும் யுஜிசி கொண்டு வந்துள்ள விதிமுறைகள், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி மீதான நேரடி தாக்குதல்.

மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையானது, அதிகாரங்களை ஒரே இடத்தில் குவிக்கவும், ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களை குறைக்கவும் வழிவகுக்கும். கல்வியானது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டுமே அன்றி, பாஜக அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும், ஆளுநரின் கட்டளைக்கு ஏற்ப இருக்கக்கூடாது.

கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படும்போது, அதிக உயர்கல்வி நிறுவனங்கள் கொண்ட மாநிலங்களில் முன்னணியில் இருக்கும் தமிழகம் அமைதியாக இருக்காது. கல்வி என்பது நமது அரசியலமைப்பில் ஒருங்கிணைந்த பட்டியலில் இருக்கும் பிரிவு. யுஜிசியின் இந்த நடவடிக்கை ஒரு தலைபட்சமானது. இந்த அத்துமீறலை ஏற்க முடியாது. சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழகம் போராடும்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்