• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

இன்றுடன் நிறைவு பெறுகிறது சென்னை புத்தக கண்காட்சி..

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்த நிலையில், இன்று கடைசி நாள் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளார் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 45வது சென்னை புத்தகக் கண்காட்சியை கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மொத்தம் 800 அரங்குகளில், 10 லட்சம் தலைப்புகளிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தக கண்காட்சி என பெயர் பெற்ற சென்னை புத்தக கண்காட்சி கடந்த 18 நாட்களாக காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்று வந்தது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறவுள்ளது. இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்னை புத்தகக் காட்சிக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த புத்தக கண்காட்சியில் நவீன இலக்கிய சரித்திர நாவல்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், ஆங்கில நாவல்கள், வரலாறு சார்ந்த நூல்கள் போன்றவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கடைசி நாள் சென்னை புத்தகக்காட்சிக்கு வாசகர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 25 ஆண்டுகளாக பதிப்பகத் துறையில் பணியாற்றியவர்களுக்கும் , புத்தக கட்காட்சி நடைபெற பெரும் பங்காற்றியவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் பங்கேற்க உள்ளார்.