காலையில் சட்னி சாம்பாருடன் வெண்பொங்கலும், சாதம், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், மோர். ஊறுகாய், அப்பளம், பாயாசத்துடன் மதியம் சாப்பாடு, இரவு சட்னி சாம்பாருடன் ரவா கிச்சடி வரும் 15ஆம் தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அன்னதானத் திட்டத்தில் வழங்கப்பட உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் அன்னதானத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வருகின்ற மார்ச் 15ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. அந்த மாற்றம் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானத்திட்டம் தற்பொழுது சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அன்னதானத் திட்டத்தில் பக்தர்களின் விருப்பத்திற்கு இணங்கவும், திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும் பயன் பெறும் வகையிலும், தற்பொழுது வழங்கப்பட்டு வரும் நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தில் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை தற்போது சாதம் கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், மோர், ஊறுகாய், அப்பளம். பாயாசம் சுகாதாரமான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின்படி, வெண்பொங்கல், சட்னி, சாம்பார் காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், சாதம், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், மோர். ஊறுகாய், அப்பளம், பாயாசம் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரையிலும் மற்றும் மாலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை ரவா கிச்சடி, சட்னி, சாம்பார் ஆகியவை வருகிற 15.03.2026ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.



