ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் தொடர்பில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் உள்பட 4 பேரிடம் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து மதுரை சரக டி.ஐ.ஜி காமினி 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணைக்கு பின்னர் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் செய்தியாளர்களை சந்தித்தார்.
முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி கடந்த 17ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு வரை என்னுடன் தொடர்பில் இருந்தார். அதற்கு பின்னர் தன்னுடன் தொடர்பில் இல்லை எனவும் நாங்களும் அவரை தேடிக் கொண்டுதான் இருக்கிறோம் என தெரிவித்தார். மேலும் கே.டி.இராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட பொய் வழக்கை அவர் சட்டபூர்வமாக சந்திப்பார் என தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக மீண்டும் தன்னை விசாரணைக்கு அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வருவேன் என்று தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உடல்நிலை சரியில்லாததால் காரணத்தால் தான் முன் ஜாமீன் வாங்குவதற்காக அவர் அலைந்து கொண்டிருக்கிறார் எனவும், முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவார் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் கூறினார்.