தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கட்சி நிர்வாகிகள் படையெடுப்பால், மனுதாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகள் என, மொத்தம் 513 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. நேற்று (பிப்.,3) மாலை 3 மணி முடிய, தேனி அல்லிநகராட்சியில் அ.தி.மு.க., சார்பில் மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் எம்.ஜெயக்குமார்(4வது வார்டு), மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ.எஸ்.ஆர்., பாலச்சந்தர் (6வது வார்டு), எஸ்.சரஸ்வதி (18வது வார்டு), மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் பி.சண்முகசுந்தரம் (19வது வார்டு), ஆர். எஸ்., சுரேஷ் (20வது வார்டு), மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் சி.மணவாளன் (31வது வார்டு), நகர இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் எம்.ஜெயபாண்டி மற்றும் தி.மு.க., வை சேர்ந்த 3 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேர், இவர்களுடன் 4வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜன் விஷால் என, மொத்தம் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலை முன்னிட்டு, நகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நாளை (பிப்.4) மனு தாக்கல் நிறைவு நாள் என்பதால், நல்ல நேரம் பார்த்து ஆளுங்கட்சியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்ய காத்திருக்கின்றனர்.