பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் மார்ச் 29-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 10-ம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும், தேர்தல் முடிவுகள் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் தர்பாங்கா கட்டடத்தின் அருகிலுள்ள பொருளாதாரத் துறையின் நூலகத்தின் வாசலில் நேற்று பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது. இதனால் உண்டான அதிர்வில் நூலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும், ஆசிரியர் ஒருவரின் காரின் கண்ணாடிகளும் உடைந்து சிதறின. இதனால் அந்த பகுதியில் நின்று க.ொண்டிருந்த மாணவர்கள் அலறியடித்தபடி தப்பியோடினர்.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிராபாஹோர் காவல் துறையினர், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மாணவர் சங்கத் தேர்தலில் தங்களது ஆளுமையை காண்பிக்க சில மாணவர் குழுக்களினால் இந்த சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், அந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மாணவர்கள் சிலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும், போலீசார் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பை அதிகரித்ததுடன் வெடித்து சிதறிய வெடிகுண்டு பாகங்களைக் கைப்பற்றி அது எவ்வகையைச் சார்ந்தது என்பதை கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுவர்களில் எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.