சரும அழகிற்கு பன்னீர்ரோஜா:
பன்னீர் ரோஜா முகத்திற்கு மென்மையும் பொலிவும் தருவதுடன் சருமத்திற்கும் பல நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு அற்புதமான மலர். இதன் இதழ்களில் அடங்கியுள்ள வைட்டமின் சி, சருமத்திற்கு அழகையும் பாதுகாப்பையும் அளிக்கிறது.
ரோஜா இதழ்களை அரைத்து தடவினால் சருமம் மென்மையாகும். குளியல் பொடியிலும் அரைத்த ரோஜா இதழ்களை சேர்க்கவும். வெயில் காரணமாக சருமம் பளபளப்பை இழந்து எண்ணெய் வடிவதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன. இந்த பிரச்சனை அகல இரு பன்னீர் ரோஜா இதழ்கள், கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தடவலாம்.
20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் பருக்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் அகலும். கருப்பான உதடு கொண்டவர்கள் அரைத்த பன்னீர் ரோஜா ஒரு டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன் கலந்து உதடுகளின் மேல் பூசி வரலாம்.
அரைத்த பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து விடும். வியர்வை நாற்றம் உள்ளவர்கள் பன்னீர் ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரை கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். வெயில் காலத்தில் முகத்தில் திட்டுத்திட்டாக தோன்றும் கருப்பான பகுதிகளில் ஒரு பன்னீர் ரோஜா, 5 தாமரை இதழ்கள், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, தேவையான அளவு காய்ச்சாத பால் ஆகியவற்றை அரைத்து பேக் போல முகத்தில் தடவலாம். மேற்கண்ட எளிய பராமரிப்புகளுக்கு நாட்டு பன்னீர் ரோஜா வகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.