நமது நாட்டின் 78வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய அரசு அஞ்சல் துறை மூலமாக ‘Har Ghar Tiranga Campaign’ இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மக்கள் தங்கள் வீடுகள் அலுவலகங்கள் மற்றும் அனைத்து பொது இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் விதமாக சிவகங்கை அஞ்சல் துறையின் மூலம் 14.08.2024 அன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை சிறப்பு அழைப்பாளர் நல்லாசிரியர் திரு. பகீரத நாச்சியப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த பேரணி சிவகங்கை தலைமை அஞ்சலகம் அலுவலகம் முன்பு தொடங்கி அரண்மனை வாசல் வழியாக நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்றது. பேரணியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அஞ்சல் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தேசிய கொடியினை ஏந்தி கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 14 பிரிவினை தினத்தை ஒட்டி சிவகங்கை மற்றும் மானாமதுரை தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியில் தேச பிரிவினையின் கொடூரங்கள் என்ற தலைப்பில் ஏராளமான புகைப்படங்கள் இடம் பெற்றது. இதனை மன்னர் மேல்நிலைப்பள்ளி, கே ஆர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் உதவிக்கோட்ட கண்காணிப்பாளர் மு.சித்ரா மற்றும் தலைமை அஞ்சலக அதிகாரி வீரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். இறுதியாக உபகோட்ட ஆய்வாளர் போற்றிராஜா நன்றி உரையாற்றினார்.
