கன்னியாகுமரியில் புனித கலசான் பள்ளியில் கராத்தே தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது

கன்னியாகுமரியில் அமைந்துள்ள புனித கலசான் பள்ளியில் கராத்தே பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியில் கல்வி பயிலும் ஏராளமான மாணவர்கள் கராத்தே மற்றும் பல்வேறு தற்காப்புக் கலைகளில் தீவிரமாகப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்தப் பயிற்சிகளை கன்னியாகுமரி கே.கே.ஆர் அகாடமியின் நிறுவனர் மற்றும் கராத்தே மாஸ்டர் ராஜ் தலைமையிலான குழு தொடர்ந்து வழங்கி வருகிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற தேர்வில் பல்வேறு நிறப் பெல்ட்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேற்று நடைபெற்ற விழாவில் பெல்ட்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பள்ளியின் முதல்வர் அருட்திரு ஜின்ஸ் ஜோஸப், மற்றும் நிகில் அருட்திரு ப்ரான்ஸிஸ் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியை ஜமீலா மற்றும் பங்கு தந்தை உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

மேலும், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் ஸ்போர்ட்ஸ் கமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள கராத்தே மாஸ்டர் ராஜ் -க்கு பள்ளி முதல்வர் ஜின்ஸ் ஜோஸப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.







