தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் தங்கமலை (43).ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி தொழில் செய்து வந்த நிலையில்,இன்று காலை பாலக் கோம்பை செல்லும் வழியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உடலில் ஆடைகள் இன்றி நிர்வாணமான நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்துள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதி வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிப்பட்டி போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையிலான போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,மோப்பநாய் பைரவா மற்றும் தடயவியல் நிபுணர் குழுவினருடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேகா பிரியா நேரில் வந்து ஆட்டோ ஓட்டுனரின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுனரின் உடல் அரசு பள்ளி வளாகத்தில் கிடப்பதால், தற்போது அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தங்கமலையை கொலை செய்தது யார்?எதற்காக கொலை செய்தனர்?என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர் அரசு பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்டு, நிர்வாணமான நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.